அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் (ஹவ்ழுல் கவ்ஸர்) தடாகத்தின் அருகே (உங்களை எதிர்பார்த்து) இருப்பேன். அப்போது உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை நான் பார்ப்பேன். எனக்கு முன்னால் சிலர் (அப்புறப்படுத்தப்பட்டு) பிடித்துக் கொள்ளப்படுவார்கள். அப்போது நான், ‘என் இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்’ என்பேன். அதற்கு, ‘உங்களுக்குப் பிறகு இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர்கள் தங்கள் குதிங்கால் வழியாக (மார்க்கத்தைவிட்டுப்) பின்னோக்கிச் சென்று கொண்டே இருந்தார்கள்’ என்று கூறப்படும்."
(இதன் அறிவிப்பாளர்) இப்னு அபீமுலைக்கா அவர்கள் (இதை அறிவிக்கும்போது பின்வருமாறு) கூறுவார்கள்:
**"அல்லாஹும்ம இன்னா நஊது பிக அன் நர்ஜிஅ அலா அஉகாபினா அவ் நுஃப்தன அன் தீனினா"**
(யா அல்லாஹ்! நாங்கள் எங்கள் குதிங்கால்களின் மீது (பின்னோக்கித்) திரும்பி விடுவதிலிருந்தும், அல்லது எங்கள் மார்க்க விஷயத்தில் சோதிக்கப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்.)