நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது உதாரணமும், அல்லாஹ் எதைக் கொடுத்து என்னை அனுப்பினானோ அதன் உதாரணமும் ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் வந்து, 'என் கூட்டத்தாரே! நிச்சயமாக நான் (எதிரிகளின்) படையை என் இரு கண்களாலேயே கண்டேன். நான் (உங்களுக்கு) பகிரங்கமாக எச்சரிப்பவன். எனவே தப்பித்துக் கொள்ளுங்கள்! தப்பித்துக் கொள்ளுங்கள்!' என்று கூறினார்.
அவருடைய சமூகத்தாரில் ஒரு சாரார் அவருக்குக் கீழ்ப்படிந்து, இரவோடு இரவாகப் புறப்பட்டு, நிதானமாகச் சென்று தப்பித்துக் கொண்டார்கள். அவர்களில் மற்றொரு சாரார் அவரைப் பொய்யெனக் கருதினர். அவர்கள் விடியும்வரை தங்கள் இடங்களிலேயே தங்கியிருந்தனர். காலையில் படை அவர்கள் மீது பாய்ந்து, அவர்களை அழித்து நிர்மூலமாக்கியது.
எனவே, இது எனக்குக் கீழ்ப்படிந்து நான் கொண்டு வந்ததைப் பின்பற்றியவர்களுக்கும்; எனக்கு மாறுசெய்து நான் கொண்டு வந்த உண்மையை நம்ப மறுத்தவர்களுக்கும் உதாரணமாகும்."
சஅத் பின் அபி வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஸ்லிம்களிலேயே மிகப் பெரும் பாவியானவர், எது தடுக்கப்படாமல் இருந்ததோ அதைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேட்டதன் காரணமாக அது தடுக்கப்பட்டுவிட்டதோ அவரே ஆவார்."
சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்கு எதிராகப் மிகப்பெரும் குற்றம் இழைத்தவர் யார் என்றால், (இதுவரை) தடை செய்யப்படாத ஒரு விஷயத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேட்டதன் காரணத்தாலேயே அது மக்கள் மீது தடை செய்யப்பட்டுவிட்டதே, அவர்தாம்."
ஆமிர் இப்னு ஸஃத் (ரழி) அவர்கள், தங்கள் தந்தை (ஸஃத் (ரழி)) வழியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் குற்றமிழைத்த முஸ்லிம் அவர்தான்; அவர், மக்களுக்குத் தடைசெய்யப்படாத ஒன்றைப் பற்றி வினவ, அது அவருடைய வினவலின் காரணத்தால் தடைசெய்யப்பட்டுவிடுகிறது.