حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي مَا وَعَدْتَنِي. فَقَالَ لَهُ " أَبْشِرْ ". فَقَالَ قَدْ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ أَبْشِرْ. فَأَقْبَلَ عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ " رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا ". قَالاَ قَبِلْنَا. ثُمَّ دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ، ثُمَّ قَالَ " اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا، وَأَبْشِرَا ". فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ، فَنَادَتْ أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَنْ أَفْضِلاَ لأُمِّكُمَا. فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً.
அபூ மூஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'அல்-ஜிஃரானா' என்னுமிடத்தில் தங்கியிருந்தபோது நான் அவர்களுடன் இருந்தேன்; பிலால் (ரழி) அவர்களும் உடனிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு வாக்களித்ததை நீங்கள் நிறைவேற்றித் தரமாட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நற்செய்தி பெற்று) மகிழ்ச்சியடையுங்கள்!" என்று கூறினார்கள். அந்த கிராமவாசி, "என்னிடம் 'மகிழ்ச்சியடையுங்கள்' என்று நீங்கள் அதிகமாகவே கூறிவிட்டீர்கள்" என்றார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவர் போன்று என் பக்கமும் பிலால் பக்கமும் திரும்பி, "இவர் நற்செய்தியை மறுத்துவிட்டார். ஆகவே நீங்கள் இருவரும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவ்விருவரும், "நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்றனர்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதில் தம் கைகளையும் முகத்தையும் கழுவி, அதில் (வாய்கொப்பளித்து) உமிழ்ந்தார்கள். பிறகு, "இதிலிருந்து நீங்கள் இருவரும் அருந்துங்கள்; உங்கள் முகங்களிலும் நெஞ்சங்களிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்; நற்செய்தி பெறுங்கள்" என்று கூறினார்கள்.
அவ்விருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து (அவ்வாறே) செய்தார்கள். அப்போது திரைக்குப் பின்னாலிருந்து உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "உங்கள் தாயாருக்கு (எனக்கு) அதில் சிறிதளவை மிச்சம் வையுங்கள்" என்று குரல் கொடுத்தார்கள். அவ்வாறே அவர்கள் அதிலிருந்து சிறிதளவை அவருக்காக மிச்சம் வைத்தார்கள்.