உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் ஜும்ஆ நாளில் பேருரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் குறிப்பிட்டார்கள். (பிறகு) அவர்கள் கூறினார்கள்:
"நான் (கனவில்) ஒரு சேவல் என்னை மூன்று முறை கொத்துவதைக் கண்டேன். எனது மரணம் நெருங்கிவிட்டதையே இது குறிப்பதாக நான் கருதுகிறேன். எனக்குப் பின் ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமிக்குமாறு கூட்டத்தார் என்னிடம் கூறுகின்றனர். அல்லாஹ் தனது மார்க்கத்தையும், தனது கிலாஃபத்தையும், தன் தூதர் (ஸல்) அவர்களை எதைக் கொண்டு அனுப்பினானோ அதையும் வீணாக்கமாட்டான். எனக்கு விரைவில் மரணம் சம்பவித்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது எவர்கள் மீது திருப்தி கொண்டிருந்தார்களோ அந்த ஆறு நபர்களுக்கு மத்தியில் (ஆலோசனையின் அடிப்படையில்) கிலாஃபத் அமைய வேண்டும்.
சில கூட்டத்தார் இந்த விவகாரத்தில் குறை கூறுவார்கள் என்பதை நான் அறிவேன். இஸ்லாத்திற்காக (அவர்களை வழிக்குக் கொண்டுவர) நான் எனது இந்தக் கரத்தால் அவர்களை அடித்துமுள்ளேன். அவர்கள் அதைச் செய்வார்களாயின் (குறை கூறினால்), அவர்கள் இறைமறுப்பாளர்களான, வழிதவறிய அல்லாஹ்வின் எதிரிகளாவர்.
மேலும், கலாலாவை (தந்தை மற்றும் பிள்ளைகள் இல்லாத நிலையில் இறப்பவரின் வாரிசுரிமைச் சட்டம்) விட முக்கியமான எதையும் எனக்குப் பின்னால் நான் விட்டுச் செல்லவில்லை. இந்த கலாலா விஷயத்தில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டது போன்று வேறு எதிலிம் கேட்டதில்லை. மேலும், இதில் என்னிடம் அவர்கள் கடுமை காட்டியது போன்று வேறு எதிலும் என்னிடம் கடுமை காட்டியதில்லை. எதுவரையென்றால், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தி, 'உமரே! அத்தியாயம் அந்-நிஸாவின் இறுதியில் உள்ள கோடைக்கால வசனம் உமக்குப் போதாதா?' என்று கேட்டார்கள். நான் (இன்னும் சில காலம்) உயிருடன் இருந்தால், குர்ஆனை ஓதுபவரும் ஓதாதவரும் (எளிதாகப்) புரிந்துகொள்ளும் வகையில் இதில் ஒரு தீர்ப்பை அளிப்பேன்.
அல்லாஹ்வே! நான் நியமித்த பிரதேசங்களின் ஆளுநர்கள் மீது உன்னைச் சாட்சியாக்குகிறேன். மக்களிடையே நீதியை நிலைநாட்டவும், அவர்களுக்கு அவர்களின் மார்க்கத்தையும், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையும் கற்றுக் கொடுக்கவும், அவர்களுக்கிடையே (போர்ச் செல்வமான) ஃபையை பங்கிட்டுக் கொடுக்கவும், அவர்களுக்கு ஏற்படும் சிக்கலான விவகாரங்களை என்னிடம் கொண்டு வரவும் தான் நான் அவர்களை அனுப்பினேன்.
பிறகு மக்களே! நீங்கள் வெங்காயம், பூண்டு ஆகிய இரு தாவரங்களை உண்கிறீர்கள். அவ்விரண்டையும் தீயவையாகவே (வாடை வீசுபவையாகவே) நான் கருதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ஒருவரிடமிருந்து இவற்றின் வாடையை நுகர்ந்தால், அவரை (வெளியேற்றி) 'பகீ' என்னுமிடத்திற்குக் கொண்டுபோய் விடுமாறு உத்தரவிடுவார்கள் என்பதை நான் பார்த்துள்ளேன். ஆகவே, அவற்றை உண்பவர் அவற்றை நன்கு சமைத்து (அதன் வாடையை) போக்கிவிடட்டும்."
மஅதான் பின் அபீ தல்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும், அபூபக்கர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். பிறகு கூறினார்கள்:
“எனக்குப் பின்னால் ‘கலாலா’ (தகப்பன், பாட்டன் மற்றும் நேரடி வாரிசுகள் இல்லாதவரின் சொத்துரிமை) விவகாரத்தை விட எனக்கு மிக முக்கியமான எதையும் நான் விட்டுச் செல்லவில்லை. கலாலா விவகாரம் குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மீள மீள) விசாரித்ததைப் போன்று, வேறு எந்த விஷயத்திலும் நான் அவர்களிடம் விசாரித்ததில்லை. மேலும், இவ்விஷயத்தில் அவர்கள் என்னிடம் கடுமை காட்டியதைப் போன்று, வேறு எதிலும் என்னிடம் கடுமை காட்டியதில்லை. எந்தளவிற்கென்றால், அவர்கள் தங்களது விரலால் என் மார்பில் குத்தி, ‘உமரே! சூரா அந்-நிஸாவின் இறுதியில் உள்ள கோடைக்கால வசனம் உமக்குப் போதாதா?’ என்று கேட்டார்கள்.
நிச்சயமாக நான் (இன்னும் சில காலம்) உயிருடன் இருந்தால், இது குறித்து ஒரு தீர்ப்பை வழங்குவேன்; குர்ஆனை ஓதுபவரும் குர்ஆனை ஓதாதவரும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் (அளவிற்குத் தெளிவானதாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அது இருக்கும்).”