அபூ சயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நரகத்தின் (நிரந்தர) வாசிகள் யாரோ, அவர்கள் அதில் மரணிக்கவும் மாட்டார்கள்; வாழவும் மாட்டார்கள். ஆனால், தங்கள் பாவங்களின் காரணமாக -அல்லது தங்கள் தவறுகளின் காரணமாக என்று (அறிவிப்பாளர்) கூறினார்- நரகம் தீண்டிய மக்களை, அவர்கள் கரிக்கட்டையாக மாறும் வரை அல்லாஹ் மரணிக்கச் செய்வான். பின்னர் (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதிக்கப்படும். அவர்கள் கூட்டங்கூட்டமாகக் கொண்டுவரப்பட்டு சொர்க்கத்தின் ஆறுகளில் பரப்பப்படுவார்கள். பின்னர், 'சொர்க்கவாசிகளே! இவர்கள்மீது (தண்ணீரை) ஊற்றுங்கள்' என்று கூறப்படும். உடனே அவர்கள், வெள்ளம் சுமந்து வரும் வண்டலில் (கிடக்கும்) வித்து முளைப்பதைப் போன்று முளைப்பார்கள்."
மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாலைவனப் பகுதியில் வசித்தவர் போல் (பேசுகிறார்களே)" என்று கூறினார்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்கண்ட ஹதீஸைப் போன்றே "வெள்ளத்தின் வண்டலில்" என்பது வரை (இந்த அறிவிப்பிலும்) இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள (வார்த்தைகளை) அவர் குறிப்பிடவில்லை.