ஹத்ரமவ்த்தைச் சேர்ந்த ஒருவரும் கிந்தாவைச் சேர்ந்த ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.
ஹத்ரமவ்த்தைச் சேர்ந்தவர், "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இவர், என் தந்தைக்குச் சொந்தமான என் நிலத்தை (அபகரித்து) என்னை மிகைத்துவிட்டார்" என்று கூறினார்.
அதற்கு கிந்தாவைச் சேர்ந்தவர், "அது என் நிலம்; என் கைவசமே உள்ளது; நானே அதில் பயிரிடுகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் இல்லை" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹத்ரமவ்த்தைச் சேர்ந்தவரிடம், "(உமது வாதத்திற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியாயின், அவரின் சத்தியமே உமக்குரியது" என்றார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அம்மனிதர் ஒரு பாவி; அவர் எதன் மீது சத்தியம் செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்துவதில்லை; எதிலிருந்தும் அவர் பேணுதல் மேற்கொள்வதில்லை" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவரிடமிருந்து உமக்கு இதைத் தவிர (சத்தியத்தைத் தவிர) வேறெதுவும் இல்லை" என்றார்கள்.
எனவே அவர் சத்தியம் செய்யச் சென்றார். அவர் (சத்தியம் செய்யத்) திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அறிந்துகொள்ளுங்கள்! ஒருவர் (பிறரின்) செல்வத்தை அநியாயமாக அடைவதற்காகச் சத்தியம் செய்தால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது, அவன் (அல்லாஹ்) அவரைப் புறக்கணிப்பான்."