நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நாங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட வேட்டை நாய்களை அனுப்புகிறோம்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "அவை உமக்காகப் பிடித்து வைத்திருப்பதை நீர் உண்பீராக" என்று கூறினார்கள். நான், "அவை (அப்பிராணியைக்) கொன்றிருந்தாலுமா?" என்று கேட்டேன். அவர்கள், "அவை கொன்றிருந்தாலும் சரியே" என்று கூறினார்கள். நான், "நாங்கள் மிஃராத் (எனும் கருவியால்) எறிகிறோம்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(அது உடலைத்) துளைத்ததை நீர் உண்பீராக; எது தனது அகலமான பக்கத்தால் தாக்கியதோ அதை உண்ணாதீர்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் வேட்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களை அனுப்புகிறேன்; அவை எனக்காக (வேட்டைப் பிராணியைப்) பிடிக்கின்றன. (அவற்றை அனுப்பும்போது) நான் அல்லாஹ்வின் பெயரைச் சொல்கிறேன்" என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேட்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்ட உமது நாயை நீர் அனுப்பி, அதன் மீது அல்லாஹ்வின் பெயரை நீர் சொல்லியிருந்தால் (அது பிடித்துக் கொண்டுவருவதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.
நான், "(அந்நாய்கள் வேட்டைப் பிராணியைக்) கொன்றுவிட்டாலுமா?" என்று கேட்டேன்.
அதற்கவர்கள், "(ஆம்,) உமது நாய்களுடன் சேராத வேறொரு நாய் அதில் பங்கெடுத்திருக்கக் கூடாது. (அப்படி வேறு நாய் பங்கெடுக்காமல்) அவை கொன்றிருந்தாலும் நீர் உண்ணலாம்" என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், "நான் மிஅராத் (எனும் கனமான அம்பைக்) கொண்டு வேட்டையாடுகிறேன்; அது (பிராணியின் மீது) படுகிறது" என்று கூறினேன்.
அதற்கவர்கள், "நீர் மிஅராத் கொண்டு எறியும்போது, அது (வேட்டைப் பிராணியைத்) துளைத்திருந்தால் அதை உண்ணுங்கள். ஆனால், அது (அம்பின்) பக்கவாட்டில் பட்டு (அடிபட்டு பிராணி இறந்தால்) அதை உண்ணாதீர்கள்" என்று கூறினார்கள்.