சலமா பின் யஸீத் அல்-ஜூஅஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் நபியே! தங்களுக்கான உரிமைகளை எங்களிடம் கேட்டு, எங்களுக்கான உரிமைகளை எங்களுக்கு மறுக்கின்ற ஆட்சியாளர்கள் எங்கள் மீது ஆட்சி புரிந்தால் (நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று) தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?"
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள். பிறகு அவர் (மீண்டும்) கேட்டார்; அப்போதும் அவரைப் புறக்கணித்தார்கள்.
பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக அவர் கேட்டபோது, அஷ்அத் பின் கைஸ் (ரலி) அவர்கள் அவரை (சலமாவை) இழுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் (ஆட்சியாளர்களுக்குச்) செவிசாயுங்கள்; கீழ்ப்படியுங்கள்! ஏனெனில், அவர்கள் சுமத்தப்பட்டதற்கு அவர்களே பொறுப்பாளிகள்; நீங்கள் சுமத்தப்பட்டதற்கு நீங்களே பொறுப்பாளிகள்."
ஸிமாக் (ரஹ்) அவர்கள் வாயிலாக, இதே அறிவிப்பாளர் தொடரில் இது போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது:
அஷ்அஸ் பின் கைஸ் (ரழி) அவர்கள், (ஸலமா பின் யஸீத் (ரழி) அவர்களை) இழுத்தபொழுது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(அவர்களுக்குச்) செவிசாயுங்கள்; மேலும் (அவர்களுக்குக்) கீழ்ப்படியுங்கள்! ஏனெனில், அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பு அவர்களைச் சாரும்; உங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பு உங்களைச் சாரும்."