அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஏதோ ஒரு தேவைக்காக ஹஃப்ஸா (ரழி) அவர்களின் இல்லத்தின் கூரையின் மீது ஏறினேன்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷாம் (சிரியா, ஜோர்டான், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி) பகுதியை முன்னோக்கியவர்களாகவும், கிப்லாவைத் தமது முதுகுக்குப் பின்னால் ஆக்கியவர்களாகவும் இயற்கைக்கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். (ஹதீஸ் எண் 147ஐக் காண்க).
"ஒரு நாள் நான் எங்கள் வீட்டின் கூரை மீது ஏறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை (ஜெருசலேம்) முன்னோக்கி இரண்டு செங்கற்கள் மீது அமர்ந்திருப்பதை நான் கண்டேன்."
வாஸிஃ இப்னு ஹப்பான் அவர்கள் அறிவித்தார்கள்:
நான் மஸ்ஜிதில் தொழுதுகொண்டிருந்தேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கிப்லாவிற்குத் தமது முதுகைச் சாய்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். எனது தொழுகையை முடித்த பிறகு, நான் ஒரு பக்கத்திலிருந்து அவர்களிடம் சென்றேன். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"இயற்கைத் தேவைக்காக நீங்கள் அமரும்போது, கிப்லாவையோ அல்லது பைத்துல் மக்திஸையோ முன்னோக்கி அமரக்கூடாது என்று மக்கள் கூறுகிறார்கள். (ஆனால்) நான் ஒரு வீட்டின் கூரை மீது ஏறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியவாறு இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்."
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டின் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும், கிப்லாவிற்கு முதுகைத் திருப்பியும் தமது (இயற்கைத்) தேவைக்காக அமர்ந்திருப்பதை நான் கண்டேன்."
"நான் எங்கள் வீட்டின் கூரையின் மீது ஏறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸை முன்னோக்கியவர்களாக மலஜலம் கழித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்."