அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் 'ஜுரைஜ்' எனப்படும் ஒருவர் இருந்தார். அவர் (தமது தவமடத்தில்) தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாய் வந்து அவரை அழைத்தார். ஆனால் அவரோ அவருக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். 'நான் அவருக்குப் பதிலளிப்பதா? அல்லது தொழுவதா?' என்று (தனக்குள்) கூறினார். பிறகு (மற்றொரு முறை) அன்னை வந்து, 'இறைவா! விபச்சாரிகளைக் காணும் வரை இவரை நீ மரணிக்கச் செய்யாதே' என்று கூறினார்.
ஜுரைஜ் தமது தவமடத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், 'நான் ஜுரைஜை நிச்சயம் குழப்பத்தில் ஆழ்த்துவேன்' என்று கூறினாள். அவள் அவருக்கு முன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு அவரிடம் பேசினாள். அவரோ மறுத்துவிட்டார். பிறகு அவள் ஓர் இடையனிடம் சென்று, தன்னை அவனிடம் ஒப்படைத்தாள். (அதனால்) அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள், 'இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்' என்று கூறினாள்.
மக்கள் அவரிடம் வந்து, அவருடைய தவமடத்தை உடைத்து, அவரை கீழே இறக்கித் திட்டினார்கள். அவர் உளூச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, 'சிறுவனே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அதற்கு அக்குழந்தை, 'இடையன்' என்று பதிலளித்தது. மக்கள், 'உமது தவமடத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்' என்று கூறினர். அதற்கு அவர், 'வேண்டாம்; களிமண்ணால் மட்டுமே (கட்டுங்கள்)' என்று கூறினார்."