(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.