பக்கம் -43-

நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜுமி என்பவன் போரின் தீ கங்குகளை முதலில் மூட்டினான் இவன் மிகுந்த கெட்ட குணமுடையவன். “நான் முஸ்லிம்களின் தடாகத்தில் நீர் அருந்துவேன் இல்லையேல் அதை உடைத்தெறிவேன் அல்லது அங்கேயே நான் செத்து மடிவேன் என அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்கிறேன்” என்று கூறியவனாக படையிலிருந்து வெளியேறினான். அவன் தடாகத்தை நெருங்க, ஹம்ஜா (ரழி) அவனை வாளால் எதிர்கொண்டு அவனது பாதத்தைக் கெண்டைக்கால் வரை வெட்டி வீழ்த்தினார்கள். அவன் காலிலிருந்து ரத்தம் சீறிப் பாய்ந்தது. தடாகத்திற்கு அருகிலிருந்த அவன் தவழ்ந்து வந்து தடாகத்திற்குள் விழுந்தான். அவன் தனது சத்தியத்தை நிறைவேற்றிவிட வேண்டுமென்று எண்ணியதால் தடாகத்திற்குள் விழுவதில் இந்த அளவு பிடிவாதம் காட்டினான். அவன் தடாகத்திற்குள் இருக்கும்போதே ஹம்ஜா (ரழி) அவர்கள் அவன் மீது மற்றொரு முறை பாய்ந்து அவனை வெட்டிச் சாய்த்தார்கள்.

ஒண்டிக்கு ஒண்டி

இந்த முதல் கொலை, போரின் நெருப்பை மூட்டியது. குறைஷிகளின் மிக தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம்மூவடரிமும் அந்த எதிரிகள் “நீங்கள் யார்?” என்றனர். அதற்கு அவர்கள் “நாங்கள் மதீனாவாசிகள்” என்றனர். அதற்கு அந்த எதிரிகள், “சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள்தான். ஆனால் உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள் தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் “முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!” என்று கத்தினான். நபி (ஸல்) அவர்கள். “உபைதா இப்னு ஹாஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே! எழுந்து செல்லுங்கள்!” என்றார்கள்.

இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் “நீங்கள் யார்?” என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் “சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே” என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி) எதிரி வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)

ஆனால், ஹம்ஜாவும் அலீயும் தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும் கொன்றுவிட்டனர். ஆனால், உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக் கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றார்கள். அதற்குப் பிறகு உபைதாவை சுமந்து கொண்டு படைக்குத் திரும்பினர். உபைதா (ரழி) இதனால் நோய்வாய்ப்பட்டு இப்போருக்குப் பின் 4 அல்லது 5 நாட்கள் கழித்து மதீனாவிற்கு செல்லும் வழியில் ‘ஸஃப்ரா’ என்ற இடத்தில் இறந்தார்கள்.

(இறைநம்பிக்கையாளர்கள், இறைமறுப்பாளர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றி தர்க்கித்தனர். ஆகவே, அவர்களில் எவர் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டு இருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும். (அல்குர்ஆன் 22:19)

இந்த வசனம் தங்கள் விஷயத்தில்தான் இறங்கியது என்று அலீ (ரழி) சத்தியமிட்டு கூறுகிறார்கள்.

எதிரிகளின் பாய்ச்சல்

போரின் ஆரம்பமே எதிரிகளைப் பொருத்தவரை கெட்டதாக அமைந்தது. தங்களின் தளபதிகளிலும் குதிரை வீரர்களிலும் மிகச் சிறந்த மூவரை அவர்கள் இழந்தனர். இதனால் ஆத்திரமடைந்து, முஸ்லிம்களின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தனர். ஆனால், முஸ்லிம்களோ தங்களது இறைவனிடம் உதவியும் பாதுகாப்பும் கோரி, பணிவுடன் தங்களது எண்ணங்களை தூய்மைப்படுத்திக் கொண்டே, எதிரிகளின் தொடர் தாக்குதல்களை சமாளித்தனர். முஸ்லிம்கள் தங்கள் இடங்களிலேயே உறுதியாக நின்று எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்தனர். ‘அஹத்! அஹத்!’ (அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!!) என்று கூறிக்கொண்டே இணைவைப்பவர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தினர்.

நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து திரும்பிய பின் நபி (ஸல்) தனது இறைவன் தனக்கு வாக்களித்ததை அவனிடம் வேண்டினார்கள்.

அவர்கள் கேட்டதாவது: “அல்லாஹ்வே! நீ எனக்களித்த வாக்கை நிறைவேற்றுவாயாக! அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும் ஒப்பந்தத்தையும் உன்னிடம் கேட்கிறேன்.”

மோதல்களும் தாக்குதல்களும் கடுமையாகச் சூடுபிடித்து உச்சக்கட்டத்தை அடைந்த போது “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று அல்லாஹ்விடம் கையேந்தினார்கள். கரங்களை உயர்த்தியதால் அவர்களின் புஜத்திலிருந்து போர்வை நழுவி விழுந்தது. அந்தளவு அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் போர்வையை அபூபக்ர் (ரழி) சரிசெய்து, “அல்லாஹ்வின் தூதரே! போதும், நீங்கள் உங்கள் இறைவனிடம் அதிகம் வேண்டிவிட்டீர்கள்” என்றார்கள்.

நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்து, வானவர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்தான்.

(நபியே!) உங்களது இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப் படுத்துங்கள் (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களைக் கணுக் கணுவாகத் துண்டித்து விடுங்கள்” என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 8:12)

மேலும் தனது தூதருக்கு அறிவித்தான்:

(உங்களைப்) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் வேண்டிய போது “அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)

அதாவது, அந்த வானவர்கள் உங்களுக்குப் பின்னிருந்து உங்களுக்கு உதவிபுரிவார்கள் என்றோ அல்லது வானவர்கள் ஒரே தடவையில் வராமல் சிலருக்குப் பின் சிலராக வருவார்கள் என்றோ கருத்து கொள்ளலாம்.

வானவர்கள் வருகிறார்கள்

நபி (ஸல்) சற்று தலையைத் தாழ்த்தி, பின்பு உயர்த்தி “அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். இதோ... ஜிப்ரீல் புழுதிகளுடன் காட்சியளிக்கிறார்” அல்லது “அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு வந்துவிட்டது. இதோ.. ஜிப்ரீல் குதிரையின் கடிவாளத்தை இழுத்து வருகிறார். அவர் உடம்பில் புழுதி படிந்திருக்கிறது” என்று கூறினார்கள்.

கவச ஆடை அணிந்து நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து வெளியேறி,

அதிசீக்கிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள், (பிறகு) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)

என்ற வசனத்தைக் கூறியவர்களாக பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை “முகங்கள் மாறட்டும்” என்று கூறி எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று அனைத்தையும் சென்றடைந்தது.

இது குறித்தே,

நீங்கள் எறியும்போது உண்மையில் அதை நீங்கள் எறியவில்லை. எனினும், அதை நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். (அல்குர்ஆன் 9:17)

என்ற வசனம் இறங்கியது.

எதிர் பாய்ச்சல்

இந்நேரத்தில்தான், நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு தனது இறுதிக் கட்டளையை அறிவித்தார்கள். “எதிரிகள் மீது பாயுங்கள்” என்று கூறி, போர் புரிய முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள். மேலும் கூறினார்கள், “முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! இன்றைய தினத்தில் போர் புரிந்து சகிப்புடனும், நன்மையை நாடியும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்களையும் பூமிகளையும் அகலமாகக் கொண்ட சொர்க்கத்தின் பக்கம் விரைந்தோடுங்கள்” என்று கூறி போருக்கு ஆர்வமூட்டினார்கள். உமைர் இப்னு அல்ஹுமாம் (ரழி) “ஆஹா! ஆஹா!” என்றார்கள். நபி (ஸல்) “நீ ஏன் ஆஹா! ஆஹா!” என்று கூறுகிறாய்? என்று கேட்க, அவர் “நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற ஆசையில் அவ்வாறு கூறினேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்! நிச்சயமாக நீர் சொர்க்கவாசிகளில் ஒருவர்தான்” என்றார்கள். அவர் தன்னிடமிருந்த சில பேரீத்தம் பழங்களை எடுத்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு, “இந்தப் பேரீத்தம் பழங்களை சாப்பிடும் வரை நான் உயிர் வாழ்வதை நீண்ட ஒரு காலமாகக் கருதுகிறேன்” என்று கூறியவராக அந்தப் பேரீத்தம் பழங்களை எறிந்து விட்டு எதிரிகளுடன் போர் புரிந்து வீரமரணம் எய்தினார். (ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறுதான் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியானைப் பார்த்து எப்போது சிரிக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “எந்தவித தற்காப்பு ஆடையும் அணியாமல் எதிரிகளுக்குள் தனது கையை அடியாரின் செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான்” என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன், தான் அணிந்திருந்த கவச ஆடையைக் கழற்றி எறிந்து விட்டு எதிரிகளிடம் போர் புரிந்து வீரமரணம் எய்தினார்.

எதிர்த்துத் தாக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளைப் பிறப்பித்தவுடன் எதிரிகளின் மீது முஸ்லிம்கள் பாய்ந்தனர் அணிகளைப் பிளந்தனர் தலைகளைக் கொய்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்த அவர்கள், எதிரிகளை நிலை தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின் தாக்கும் வேகமும் குறைந்தது வீரமும் சோர்வுற்றது. எதிரிகளால் முஸ்லிம்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல! அன்று நபி (ஸல்) கவச ஆடை அணிந்து, யாரும் நெருங்க முடியாத அளவு எதிரிகளுக்கருகில் நெருங்கி நின்று,

அதிசீக்கிரத்தில் இந்த கூட்டம் சிதறடிக்கப்படும். மேலும் (இவர்கள்) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)

என்று உறுதியுடன் மிகத் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்காட்சியைப் பார்த்த முஸ்லிம்களுக்கு உற்சாகமும் ஆவேசமும் பன்மடங்கு பெருகின. (ஸஹீஹுல் புகாரி)

ஆகவே, முஸ்லிம்கள் மிகத் துணிவுடன் சண்டையிட்டார்கள். வானவர்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள்.

அபூஜஹ்லின் மகன் இக்மா கூறுகிறார்: அன்றைய தினத்தில் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழும் ஆனால், அவரை வெட்டியவர் யாரென்று தெரியாது. (இப்னு ஸஅது)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகின்றார்கள்: ஒரு முஸ்லிம் எதிரியைத் தாக்க பின்தொடர்ந்து செல்லும் போது மேலிருந்து ஒரு சாட்டையின் ஒலியையும் ‘ஹைஸூமே! முன்னேறு’ என்று கூறும் ஒரு குதிரை வீரன் அதட்டலையும் கேட்டார். அதன் பிறகு அந்த முஸ்லிம், எதிரியை பார்க்கும் போது அந்த எதிரி மூக்கு அறுக்கப்பட்டு, முகம் பிளக்கப்பட்டு மல்லாந்துக் கிடந்தான். அவனது உயிர் முற்றிலும் பிந்திருந்தது. அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினார். “ஆம்! நீர் உண்மைதான் கூறுகிறீர். அது மூன்றாவது வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய உதவியாகும்” என்று நபி (ஸல்) விளக்கமளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூதாவூது அல் மாஸினி (ரழி) கூறுகிறார்கள்: நான் ஒரு எதிரியை வெட்டுவதற்காக அவனை பின்தொடர்ந்த போது எனது வாள் அவன் மீது படுவதற்கு முன்னதாகவே அவனது தலை கீழே விழுந்தது. எனவே, வேறு யாரோ அவனை வெட்டினார்கள் என்று நான் அறிந்து கொண்டேன்.

அன்சாரிகளில் ஒருவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபை கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். அப்பாஸ் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் என்னை கைது செய்யவில்லை. என்னை கைது செய்தது சிறந்த குதிரையின் மீது அமர்ந்து வந்த மிக அழகிய முகமுடைய ஒருவர்தான். ஆனால், இப்போது அவரை நான் இந்தக் கூட்டத்தில் பார்க்கவில்லையே?” என்று கூறினார். அதற்கு அன்சாரி “அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவரைக் கைது செய்தேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “நீங்கள் அமைதியாக இருங்கள்! அல்லாஹ்தான் சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு உதவி செய்தான்” என்று கூறினார்கள்.

அலீ (ரழி) கூறினார்கள்: பத்ர் போரில் என்னையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் பார்த்து நபி (ஸல்) “உங்கள் இருவரில் ஒருவருடன் ஜிப்ரீலும், மற்றொருவருடன் மீக்காயிலும் இருக்கிறார். பெரிய வானவரான இஸ்ராஃபீலும் போரில் கலந்திருக்கிறார்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பஜ்ஜார், முஸ்தத்ரகுல் ஹாகிம்)