பக்கம் -92-

மக்காவை வெற்றி கொள்வது


அறிஞர் இப்னுல் கைய்” (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா? மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது)

உடன்படிக்கையை மீறுதல்

ஹுதைபிய்யாவில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஒன்று: “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினல் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.” இந்த விவரத்தை இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் வந்து, இந்த உடன்படிக்கை ஏற்பட்டதற்குப் பின் இரு சாராரும் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.

சில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்ர் கிளையினர் குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர்.

ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி’ என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் “நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!” என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். “பக்ர் இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?” என்றான். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.

குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு விரைந்தார். அங்கிருந்து நபியவர்களின் பள்ளிவாயிலை நோக்கி நடந்த அவர், பள்ளிக்குள் நுழைந்ததும் நபியவர்கள் முன்னிலையில் நின்று கொண்டார். நபியவர்கள் மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அம்ரு நடந்த துக்கத்தை கவிதைகளில் பாடிக் காட்டினார்.

இறைவா! நான் முஹம்மதிடம் எங்களின் ஒப்பந்தத்தையும்
அவர் தந்தையின் பழமையான ஒப்பந்தத்தையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்
நாங்கள் பெற்றோர்கள் பின்பு நாம் முஸ்லிமானோம்
பின்வாங்கவில்லை முழுமையாக உதவுங்கள்
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான ஒப்பந்தத்தை முறித்து விட்டனர்.
கதாவில் எனக்குப் பதுங்கு குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனை... பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.

அவன் கவிதைகளைக் கேட்ட நபி (ஸல்) “உனக்கு உதவி செய்யப்படும்” என்று ஆறுதல் கூறினார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மேகம் அங்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் “இம்மேகம் குஜாஆ கிளையினர் உதவி பெற்று விட்டனர் என்பதற்கு முன் அறிவிப்பு” என்றார்கள்.

பிறகு ஃபுதைல் இப்னு வரகா அல்குஸாம் தனது கோத்திரத்தினர் சிலரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களது சமூகம் வந்து, தங்களில் பலர் கொல்லப்பட்டதையும், குறைஷிகள் பலர் தங்களுக்கு எதிராக பக்ரு குலத்தவருக்கு உதவி செய்ததையும் கூறிவிட்டு மக்கா திரும்பினார்.

அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

குறைஷிகளும், அவர்களது தோழர்களும் செய்தது ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும் மிகப்பெரிய மோசடியாகும். எவ்விதத்திலும் இச்செயலை நியாயப்படுத்த முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்களின் இத்தீய செயலுக்குப் பின் அதன் விபரீதத்தை அறிந்து கொண்ட குறைஷிகள் உடனடியாக அவசர ஆலோசனை சபையைக் கூட்டினர். ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குத் தங்களின் தளபதி அபூஸுஃப்யானை மதீனாவுக்கு அனுப்ப வேண்டுமென்று அதில் முடிவெடுத்தனர்.

“தங்களின் மோசடி செயலுக்குப் பின் குறைஷிகள் என்ன செய்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தார்கள். அநேகமாக ஒப்பந்தத்தை உறுதிசெய்து, அவகாசத்தை நீட்டித் தருவதற்காக அபூ ஸுஃப்யான் உங்களிடம் வருவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

குறைஷிகள் முடிவு செய்தவாறே அபூ ஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்பட்டார். வழியில் மதீனாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த புதைல் இப்னு வரகாவை ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தில் சந்தித்து “புதைலே எங்கு போய் வருகிறீர்?” என்றார். அவர், “நான் எனது கோத்திரத்தாருடன் இந்த கடற்கரை மற்றும் இந்தப் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க வந்தேன்” என்று கூறினார். அபூ ஸுஃப்யான் “நீ முஹம்மதிடம் சென்று வரவில்லையா?” என்று கேட்டார். அவர் “இல்லையென்று” கூறிவிட்டார். புதைல் அந்த இடத்தை விட்டு மக்கா நோக்கிப் புறப்பட்டு போன பின்னர் அபூ ஸுஃப்யான், “புதைல் மதீனாவுக்குச் சென்றிருந்தால் அங்கு தனது ஒட்டகங்களுக்கு தின்பதற்கு பேரீத்தம் கொட்டைகளைக் கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவரது ஒட்டகம் படுத்திருந்த இடத்திற்கு வந்து, அதன் சாணத்தைக் கிளறினார். அதில் பேரீத்தங்கொட்டைகளை பார்த்தவுடன், “நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்! புதைல் முஹம்மதிடம்தான் சென்று வந்திருக்கிறார்” என்று கூறினார்.

அபூ ஸுஃப்யான் மதீனா வந்தடைந்து தனது மகள் உம்மு ஹபீபாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த விரிப்பில் அவர் உட்கார நாடிய போது சட்டென உம்மு ஹபீபா (ரழி) அதைச் சுருட்டி விட்டார். “என் அருமை மகளே! இந்த விரிப்பில் நான் உட்காருவதற்குத் தகுதி அற்றவனா? அல்லது இந்த விரிப்பு எனக்குத் தகுதியற்றதா?” எனக் கேட்டார். “இல்லை! இது நபி (ஸல்) அவர்களின் விரிப்பு; நீர் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அசுத்தமானவர்” என்று உம்மு ஹபீபா (ரழி) பதில் கூறினார்கள். இதைக் கேட்ட அவர் “என்னிடமிருந்து வந்ததற்குப் பின் உனக்கு ஏதோ தீங்கு நேர்ந்து விட்டது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைப் பற்றிப் பேசினார். ஆனால் நபி (ஸல்) அவருக்கு எந்த பதிலும் கூறாததால், அங்கிருந்து எழுந்து அபூபக்ரிடம் வந்து நபியவர்களிடம் தன் விஷயமாகப் பேசுமாறு கூறினார். அதற்கு அபூபக்ர், (ரழி) “அது என்னால் முடியாது” எனக் கூறிவிட்டார்கள். பின்பு அங்கிருந்து உமரிடம் சென்று நபியவர்களிடம் பேசுமாறு கூறினார். அதற்கு உமர் (ரழி) “நானா உங்களுக்காக நபியவர்களிடம் சிபாரிசு செய்வேன்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் ஒரு சிறு குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை என்றாலும் அதைக் கொண்டே உங்களிடம் போர் புவேன்” என்று கூறினார்கள். பின்பு அவர் அலீ (ரழி) இடம் வந்தார். அங்கு அவருடன் ஃபாத்திமாவும் இருந்தார்கள். அவ்விருவருக்கும் முன்பாக சிறுபிள்ளையாக இருந்த ஹஸன் (ரழி) தவழ்ந்து கொண்டிருந்தார். அவர் “அலீயே! நீ எனக்கு உறவில் மிக நெருக்கமானவர். ஒரு தேவைக்காக உம்மிடம் வந்திருக்கின்றேன். நான் தோல்வியுற்றவனாக இங்கிருந்து செல்லக் கூடாது. எனவே, எனக்காக முஹம்மதிடம் சிபாரிசு செய்” என்று கூறினார். அலீ (ரழி) “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நபியவர்கள் தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள். அது விஷயமாக நாங்கள் அவர்களுடன் பேச முடியாது” என்று கூறிவிட்டார்கள். அவர் ஃபாத்திமாவின் பக்கம் திரும்பி “நீ உனது மகனிடம் சொல்! அவர் மக்களுக்கு மத்தியில் கார்மானமும் பாதுகாப்பும் நிலவ வேண்டுமென்று அறிவிப்புச் செய்யட்டும்! இதனால் காலமெல்லாம் அவர் அரபியர்களின் தலைவராக விளங்குவார்” என்று கூறினார். ஃபாத்திமா (ரழி), “அந்தத் தகுதியை எனது மகன் இன்னும் அடையவில்லை நபியவர்கள் இருக்க வேறு எவரும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க முடியாது.” என்று கூறிவிட்டார்கள்.

இந்தப் பதில்களையெல்லாம் கேட்ட அபூ ஸுஃப்யானின் கண்களுக்கு முன் உலகமே இருண்டு விட்டது. அவர் அலீ (ரழி) அவர்களிடம் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் கவலை தோய்ந்த தொனியிலும் “அபுல் ஹஸனே! நிலைமை மோசமாகிவிட்டது. எனக்கு ஏதாவது நல்ல யோசனை கூறுங்கள்” என்றார். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு பயன் தரும் எந்த விஷயத்தையும் நான் அறியமாட்டேன். எனினும், நீ கினானா கிளையினரின் தலைவனாக இருக்கிறாய். நீ எழுந்து சென்று “மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பும் அச்சமற்றத் தன்மையும் நிலவவேண்டும்” என்று அறிவிப்பு செய்! பிறகு, உனது ஊருக்கு சென்றுவிடு!” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர் “இதனால் எனக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரழி), “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது பயன் தரும் என்று நான் எண்ணவில்லை என்றாலும் என்னிடம் உனக்காக அதைத் தவிர வேறு யோசனை எதுவுமில்லை” என்று கூறினார். அபூ ஸுஃப்யான் அங்கிருந்து எழுந்து பள்ளிக்குச் சென்று “மக்களே! நான் மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பு நிலவவேண்டும் என்று அறிவிப்பு செய்கிறேன்” என்று கூறிவிட்டு, தனது ஒட்டகத்தில் ஏறி மக்கா சென்றுவிட்டார்.

அபூ ஸுஃப்யான் குறைஷிகளிடம் வந்து சேர்ந்த போது “என்ன செய்தியை பெற்று வந்திருக்கிறீர்?” என்று அவர்கள் கேட்டனர். “நான் முஹம்மதிடம் சென்று பேசினேன். அவர் எந்த பதிலும் எனக்குக் கூறவில்லை. பின்பு அபூபக்ரிடம் சென்று பேசினேன். அவருடன் பேசியதில் எப்பயனுமில்லை. பின்பு உமரிடம் பேசினேன். அவர் நமக்கு மிகப்பெரிய எதிரியாக விளங்குகிறார். பின்பு அலீயிடம் சென்றேன். அவர் மிக மென்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு ஓர் ஆலோசனைக் கூறினார். அதன்படி நானும் செய்துவிட்டு வந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த ஆலோசனை எனக்கு பயனளிக்குமா? அளிக்காதா? என்பது எனக்குத் தெரியாது” என்றார். “அவர் உனக்கு என்ன ஆலோசனை கூறினார்?” என்று குறைஷிகள் கேட்டனர்.

“மக்களுக்கு மத்தியில் நான் பாதுகாப்புத் தருகிறேன். (குறைஷிகளால் உங்களுக்கு இனி எந்த இடையூறும் ஏற்படாது)” என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் அறிவிப்புச் செய்யும்படி எனக்குக் கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். “அதை முஹம்மது ஏற்றுக் கொண்டாரா?” என்று குறைஷியர் கேட்டனர். “இல்லை” என்று அபூ ஸுஃப்யான் கூறினார். “உனக்கு நாசம் உண்டாகட்டுமாக! அந்த ஆள் (அலீ) உன்னுடன் நன்றாக விளையாடி விட்டார்” என்று குறைஷிகள் கூறினர். அதற்கு அபூ ஸுஃப்யான், “இல்லை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கூறியதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்று கூறினார்.

மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

அறிஞர் தப்ரானியின் அறிவிப்பிலிருந்து நமக்குத் தெரிய வருவதாவது: குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டனர் என்ற செய்தி தனக்குக் கிடைப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே போருக்கான சாதனங்களைத் தயார் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவிற்கு உத்தர விட்டிருந்தார்கள். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஒரு தடவை அபூபக்ர் (ரழி), ஆயிஷா (ரழி) வீட்டிற்கு வந்த போது “எனதருமை மகளே! இது என்ன தயாரிப்பு?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது” என்று ஆயிஷா (ரழி) கூறினார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறைஷிகளிடம் போர் புரிவதற்கான காலமுமில்லையே! நபி (ஸல்) அவர்கள் எங்குதான் செல்லப் போகிறார்கள்?” என்று அபூபக்ர் (ரழி) கேட்டதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதுபற்றி எனக்கு எந்த அறிவுமில்லை” என்று ஆயிஷா (ரழி) கூறிவிட்டார்கள். மூன்றாவது நாள் காலையில் ‘குஜாஆ’ கோத்திரத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு சாலிம் என்பவர் நாற்பது நபர்களுடன் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து, முன்னால் கூறப்பட்ட அந்தக் கவிகளைப் பாடினார். அப்போதுதான் உடன்படிக்கை மீறப்பட்டு விட்டது என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.

அம்ர் வந்து சென்றதற்குப் பின் புதைல் சில தோழர்களுடன் நபியவர்களிடம் வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரித்தார். புதைல் சென்றதற்குப் பின் அபூ ஸுஃப்யான் மதீனா வந்ததைப் பார்த்த முஸ்லிம்கள் தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மை என்பதை அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டதுடன், நாம் மக்காவிற்கு செல்ல இருக்கிறோம் என்றும் அறிவித்தார்கள். மேலும் “அல்லாஹ்வே! நான் குறைஷிகளின் ஊருக்கு அவர்களுக்குத் தெரியாமல் திடீரென நுழையும் வரை எந்தச் செய்தியும் அவர்களுக்குச் சேராமலும், ஒற்றர்கள் அவர்களைச் சென்றடையாமலும் நீ பாதுகாப்பாயாக” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும், தங்களின் படையைப் பற்றிய செய்தியை முழுமையாக மறைப்பதற்காக வேறொரு திசையில் சிறிய படையொன்றை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் தொடக்கத்தில் மதீனாவிலிருந்து மூன்று பரீதும் தொலைவிலுள்ள தூகஷப், துல்மர்வா என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள ‘இழம்’ என்ற இடத்திற்கு அபூ கதாதா இப்னு ப்இ (ரழி) அவர்களின் தலைமையில் 8 வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். நபியவர்களும் ‘இழம்’ என்ற இடத்திற்குத்தான் செல்ல இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் இதே செய்தி பரவ வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். இப்படை தனது பயணத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) கூறிய இடத்தை சென்று அடைந்த போது நபியவர்கள் மக்கா நோக்கி பயணமாகி விட்டார்கள் என்ற செய்தி அப்படைக்குக் கிடைத்தது. உடன் அவர்களும் நபியவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடி சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான். உடனே நபியவர்கள் அலீ, மிக்தாத், ஜுபைர், அபூமர்ஸத் கனவி (ரழி) ஆகியோரை அழைத்து “நீங்கள் ‘காக்’ என்ற தோட்டத்திற்குச் செல்லுங்கள் அங்கு ஒரு பெண் பயணி இருப்பாள் அவளிடம் குறைஷிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று இருக்கிறது. அதைக் கைப்பற்றுங்கள்!” என்று கூறினார்கள்.

அவர்கள் விரைந்து சென்று அவ்விடத்தை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) கூறியபடி அப்பெண் இருக்க, அவளை வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறி அவளிடம் “உன்னிடமுள்ள கடிதம் எங்கே? என்று கேட்டார்கள். அவள் “என்னிடம் எக்கடிதமும் இல்லை” என்றாள். அவர்கள் அவளது பயணச் சாமான்கள் அனைத்தையும் தேடினர். ஆனால், அதில் ஏதும் கிடைக்கவில்லை.

“அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். அல்லாஹ்வின் தூதர் பொய் கூற மாட்டார்கள், நாங்களும் பொய் கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீயாக அக்கடிதத்தை கொடுத்து விடு அல்லது உனது ஆடையை களைந்து நாங்கள் தேடுவோம்” என்று அலீ (ரழி) கூறினார்கள். அலீயின் பிடிவாதத்தைப் பார்த்த அப்பெண் “விலகிக் கொள்” என்று கூற அலீ (ரழி) விலகிக் கொண்டார்கள். தனது சடையை அவிழ்த்து அதிலிருந்த கடிதத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்கள் அதை நபியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அந்த கடிதத்தில்: “ஹாதிப் இப்னு அபூ பல்தஆ குறைஷிகளுக்கு எழுதுவது: நபி (ஸல்) உங்களை நோக்கி புறப்பட்டு விட்டார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. நபி (ஸல்) ஹாதிபை அழைத்தார்கள். “ஹாதிபே! இது என்ன?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள் கின்றேன். நான் மதம் மாறவுமில்லை. அதை மாற்றிக் கொள்ளவுமில்லை. நான் குறைஷிகளுடன் சேர்ந்துதான் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல. எனது குடும்பத்தினர்களும், உறவினர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு அங்கு எனக்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடன் இருக்கும் மற்றவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அங்கு அவரது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். நான் குறைஷிகளுக்கு இந்த உதவியைச் செய்தால், அதனால் அவர்கள் எனது குடும்பத்தைப் பாதுகாப்பார்கள். அதற்காகவே நான் அவர்களுக்கு இந்த உதவியைச் செய்ய ஆசைப்பட்டேன்” என்று ஹாதிப் (ரழி) பதில் கூறினார். இந்தப் பதிலை கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி), “அல்லாஹ்வின் தூதரே! அவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள். அவர் நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார். அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ் பத்ரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். நான் உங்களின் பாவங்களை நிச்சயமாக மன்னித்து விட்டேன்” என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கூறினார்கள். நபியவர்களின் இந்தப் பதிலால் உமரின் கண்களிலிருந்து கண்ணீர் மல்கியது. “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள்” என உமர் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு ஒற்றர்கள் வழியாக செய்தி கடத்தப்படுவதையும் அல்லாஹ் தடுத்து விட்டான். முஸ்லிம்கள் போருக்குத் தயாராகி வருகிறார்கள் என்ற எந்தவித செய்தியும் குறைஷிகளுக்குக் கிடைக்கவில்லை.