பக்கம் -94-

குறைஷிகளின் அதிர்ச்சி

நபி (ஸல்) அபூஸுஃப்யானைக் கடந்து சென்றவுடன் அப்பாஸ் (ரழி) அபூஸுஃப்யானிடம் “உடனடியாக நீ உன் கூட்டத்தனரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவிப்புச் செய்!” எனக் கூறினார். அபூஸுஃப்யான் (ரழி) மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு ‘குறைஷிகளே! இதோ... முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்புப் பெறுவர்’ என்று முழக்கமிட்டார். அபூஸுஃப்யானின் இந்நிலையைக் கண்ட அவரது மனைவி அவரது மீசையை பிடித்திழுத்து “கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்’ என்று கூறினார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான் (ரழி) “மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது! எனது பேச்சைக் கேளுங்கள்! இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்புப் பெறுவர்” என்று கூறினார். அதற்கு “அல்லாஹ் உன்னை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?” என்று மக்கள் கேட்டனர். “யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார் யார் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் செல்வாரோ அவரும் பாதுகாப்பு பெறுவார்” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளிகளையும் நோக்கி ஓடினர்.

ஆனால், அதே சமயத்தில் குறைஷிகள் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அவர்களை முஹம்மதுடன் சண்டை செய்ய நாம் அனுப்புவோம். சண்டையில் நமக்கு வெற்றி கிடைத்தால் அதுதான் நமது நோக்கம். சண்டையில் நமக்கு தோல்வி ஏற்பட்டால் இந்த வாலிபர்களின் இழப்புக்காக அவர்களின் குடும்பத்தினர் நம்மிடம் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்தனர்.

இதற்கேற்ப பல கோத்திரத்திலிருந்தும் சில குறைஷி அறிவீனர்கள் இக்மா இப்னு அபூ ஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமையா, ஸஹ்ல் இப்னு அம்ர் ஆகியோருடன் ‘கந்தமா’ என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை எதிர்க்க ஆயத்தமானார்கள். அப்படையில் மாஷ் இப்னு கைஸ் என்பவனும் இருந்தான். இதற்கு முன் இவன் தனது வீட்டில் எப்போதும் ஆயுதங்களைத் தயார்படுத்திக் கொண்டே இருந்தான். ஒருநாள் அவனது மனைவி அவனிடம் “எதற்காக நீ இவ்வாறு தயார் செய்கிறாய்” என்று கேட்டாள். அதற்கவன் “முஹம்மது மற்றும் அவரது தோழர்களுடன் நான் சண்டை செய்ய இதைத் தயார் செய்கிறேன்” என்று கூறினான். “முஹம்மது மற்றும் அவரது தோழர்கள் முன் எதுவும் தாக்குப்பிடிக்காது (அவர்களை எவராலும் எதிர்க்க முடியாது). அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்று மனைவி கூறினாள். ஆனால் அவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களின் சிலரைச் சிறைபிடித்து வந்து உனக்கு பணியாளர்களாக நான் அமர்த்துவேன்” என்று கூறிவிட்டு தன்னைப் பற்றி பெருமையாக கவிதை பாடினான்,

அவர்கள் இன்று முன்வந்தால் நான் எங்ஙனம் விலகுவது
என்னிடம் முழு போராயுதமும் சிறு ஈட்டியும்
குத்தி குலை எடுக்கும் இருபுறம் கூரான வாளும் உள்ளன.

இஸ்லாமியப் படை ‘தூதுவா’வை அடைகிறது

நபி (ஸல்) அவர்கள் படைக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள். ‘தூதுவா’ என்ற இடம் வந்தவுடன் அல்லாஹ் தனக்களித்த இவ்வெற்றியை எண்ணி அவனுக்குப் பணிந்தவர்களாக தலையைத் தாழ்த்தியும் நுழைந்தார்கள். அவர்களது தாடியின் முடி அவர்கள் அமர்ந்திருந்த கஜவா பெட்டியின் கம்பை தொட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தை அடைந்தவுடன் தங்களது படையை நிறுத்தி அதைப் பல பிரிவுகளாக அமைத்தார்கள். அதாவது, வலப்பக்கம் உள்ள படைக்கு காலிது இப்னு வலீதை (ரழி) தளபதியாக்கினார்கள். இப்படையில் அஸ்லம், சுலைம், கிஃபார், முஸைனா, ஜுஹைனா மற்றும் பல அரபி கோத்திரங்கள் இருந்தனர். உங்களுடன் குறைஷிகளில் எவராவது போர் புரிய வந்தால் அவரை வெட்டி வீசிவிடுங்கள். மக்காவின் கீழ்ப்புறமாகச் சென்று எனது வருகைக்காக ஸஃபா மலையில் எதிர்பார்த்திருங்கள் என்று நபி (ஸல்) கூறியனுப்பினார்கள்.

இடப்பக்கம் உள்ள படைக்கு ஜுபைர் இப்னு அவ்வாமை (ரழி) தளபதியாக்கி அவருக்கு ஒரு கொடியை வழங்கினார்கள். மக்காவின் மேல்புறமுள்ள ‘கதா’ என்ற இடத்தின் வழியாக மக்காவுக்குள் நுழைந்து ‘ஹுஜ்ன்’ என்ற இடத்தில் கொடியை நாட்டி தங்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிட்டார்கள்.

கால்நடையாக வந்த வீரர்களுக்கும் ஆயுதமின்றி வந்த வீரர்களுக்கும் அபூ உபைதாவை (ரழி) தளபதியாக்கி ‘பத்னுல் வாதி’ வழியாக மக்காவுக்குள் நுழையுமாறு அவருக்கு ஆணையிட்டார்கள்.

இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

நபி (ஸல்) கூறிய வழியில் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு பிரிவும் புறப்பட ஆரம்பித்தது. காலித் (ரழி) மற்றும் அவரது படையினரும் தங்களை எதிர்த்த முஷ்ரிக்குகளை வெட்டி வீழ்த்தினர். காலிதின் படையிலிருந்த குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபிஹ், குனைஸ் இப்னு காலித் இப்னு ரபிஆ (ரழி) ஆகிய இருவரும் படையை விட்டு வழிதவறி வேறொரு வழியில் சென்றனர். இவ்விருவரையும் குறைஷிகள் கொன்று விட்டனர். ‘கன்தமா’ என்ற இடத்தில் ஒன்று சேர்ந்திருந்த குறைஷி வீணர்கள் காலிதின் படையை எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம் வீரர்கள் எதிர்த்துத் தாக்கியதில் பன்னிரெண்டு முஷ்ரிக்குகள் கொல்லப்பட்டனர். இதைப் பார்த்து கதிகலங்கிய முஷ்ரிக்குகள் உயிர் பிழைக்க தப்பித்து ஓடலானார்கள். இவ்வாறு புறமுதுகுக் காட்டி ஓடியவர்களில் முஸ்லிம்களுடன் சண்டை செய்வதற்காக நீண்ட காலமாக ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருந்த மாஸ் இப்னு கைஸும் ஒருவனாவான். தப்பித்து ஓடிய இவன் தனது வீட்டினுள் ஒளிந்து கொண்டு “விரைவாகக் கதவை தாழிட்டுக் கொள்!” என்று கத்தினான். அவனைப் பார்த்த அவனது மனைவி “என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாயே! அந்த வீராப்பெல்லாம் இப்போது எங்கே போய்விட்டது?” என்று கேட்டார். அதற்கு அவன் பாடிய கவிதைகளாவது:

“ஃகன்தமா போர்க்கள நாளை நீ கண்டிருந்தால்....
நீ என்னைப் பழித்து ஒரு சொல் கூட உதிர்க்க மாட்டாய்.
ஸஃப்வான் ஓட் இக்மாவும் ஓட ஓட,
உருவிய வாள்கள் எங்களை வரவேற்றன
முன் கைகளையும் தலைகளையும் வெட்டி அவை சாய்த்தன
அங்கு வீரர்களின் முழக்கங்கள், கர்ஜனைகள்,
முக்கல் முனகல் இதைத் தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை......”

காலித் (ரழி) இவ்வாறு மக்காவுக்குள் நுழைந்து ஸஃபா மலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.

இது ஒருபுறமிருக்க ஜுபைர் (ரழி), இன்றைய ‘ஃபத்ஹ்’ பள்ளிவாசலுக்கருகில் உள்ள ‘ஹஜுன்’ என்ற இடத்தில் நபி (ஸல்) தன்னிடம் கொடுத்த கொடியை நட்டுவிட்டு அவ்விடத்தில் ஒரு கூடாரம் அமைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார்கள்.

நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள் சிலைகளை அகற்றுகிறார்கள்

நபி (ஸல்) அங்கிருந்து புறப்பட்டார்கள். அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்சாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் பள்ளிக்குள் நுழைந்து ஹஜ்ருல் அஸ்வதை நெருங்கிச் சென்று, அதைத் தங்களது கையால் தொட்டு முத்தமிட்டு கஅபாவைத் தவாஃப் செய்தார்கள். தங்களது கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை

“சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” (அல்குர்ஆன் 17:81)

என்ற வசனத்தை ஓதியவர்களாகக் குத்திக் கீழே தள்ளினார்கள். சிலைகளெல்லாம் முகம் குப்புற கீழே விழுந்தன. நபியவர்கள் வாகனத்தின் மீது இருந்து கொண்டே தவாஃப் செய்தார்கள். இஹ்ராம் அணியாமல் இருந்ததால் தவாஃப் மட்டுமே செய்தார்கள். தவாiஃப முடித்தவுடன் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) அவர்களை அழைத்து அவரிடம் இருந்து கஅபாவின் சாவியைப் பெற்று அதைத் திறக்கக் கூறினார்கள். நபி (ஸல்) உள்ளே நுழைந்து வரையப்பட்ட பல படங்களைப் பார்த்தார்கள். அப்படங்களில் நபி இப்றாஹீம், நபி இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரும் அம்புகளைக் கொண்டு குறி பார்க்கும் வகையில் வரையப்பட்ட படமும் இருந்தது. இதனைக் கண்ட நபி (ஸல்) “அல்லாஹ் இவ்வாறு வரைந்தவர்களை நாசமாக்குவானாக! இவ்விருவரும் ஒரு காலமும் அம்புகளைக் கொண்டு குறி பார்த்ததே கிடையாது” என்றார்கள். மேலும், கஅபாவுக்குள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் புறாவின் உருவம் இருந்தது. அதையும் நபி (ஸல்) தங்களது கைகளால் உடைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அங்கு வரையப்பட்டிருந்த மற்ற உருவப் படங்களும் அழிக்கப்பட்டன.

நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள் குறைஷிகளிடம் உரையாற்றுகிறார்கள்!

நபி (ஸல்) கஅபாவுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். நபியுடன் உஸாமா, பிலால் (ரழி) ஆகிய இருவரும் உள்ளே உடனிருந்தனர். கஅபாவின் வாயிலுக்கு நேர் திசையிலுள்ள சுவரை நோக்கி வந்து மூன்று முழங்கள் சுவருக்கும் தனக்குமிடையே இடைவெளி விட்டு நின்று கொண்டார்கள்.

கஅபா அப்போது ஆறு தூண்கள் மீது அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) தனது இடப்புறத்தில் இரண்டு தூண்கள், வலப்புறத்தில் ஒரு தூண் தனக்குப் பின் மூன்று தூண்கள் இருக்குமாறு அமைத்து (நின்று) கொண்டு தொழுதார்கள். தொழுத பின் கஅபாவுக்குள் சுற்றி வந்து ஒவ்வொரு மூலையிலும் (லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்) இறைவனை புகழ்ந்து, மேன்மைப் படுத்தினார்கள். பின்னர் கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் அனைவரும் பள்ளிக்குள் திரண்டு வரிசையாக நின்று கொண்டு நபி (ஸல்) என்ன செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.

நபி (ஸல்) கஅபா வாசலுடைய நிலைப்படியை பிடித்துக் கொண்டு நின்றார்கள். கீழே பள்ளியில் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் குறைஷிகளை நோக்கி பின்வருமாறு உரை நிகழ்த்தினார்கள். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எவ்விதத் துணையுமில்லை. அவன் தனது வாக்கை நிலைநாட்டினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்து சிறப்புகளையும் மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவறாகக் கொலை செய்து விடுதல் என்பது ‘ஷிப்ஹுல் அம்தை“ப் போன்றுதான். (சாட்டை அல்லது கைத்தடி போன்ற கொலை செய்யப் பயன்படாத ஆயுதங்களால் தாக்கும் போது ஏற்படும் எதிர்பாராத கொலைக்கு ‘ஷிபஹுல் அம்து’ எனப்படும்.) இதற்குக் கடுமையான குற்றப் பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும். (அதாவது, 100 பெண் ஒட்டகங்கள் கொடுக்க வேண்டும். அதில் 40 சினை ஒட்டகங்களாக இருக்க வேண்டும்.) குறைஷிக் கூட்டமே! அறியாமைக் காலத்தில் நீங்கள் கடைப்பிடித்த மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் முன்னோர்களைக் கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது உங்களை விட்டு அல்லாஹ் போக்கி விட்டான் மக்கள் அனைவரும் ஆதமிடமிருந்து வந்தவர்கள் ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர். பின்பு அடுத்து வரும் திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின் றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவ னாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:13)

உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது

மேற்கூறிய திருவசனத்தை ஓதிக் காட்டிய பின்பு “குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகிறீர்கள்?” என நபி (ஸல்) கேட்க, “நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரன் மகனாகவும் இருக்கின்றீர்கள்” என பதில் கூறினர். நபி (ஸல்) “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.

கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்

உரைக்குப் பின்பு நபி (ஸல்) கீழிறங்கி வந்து பள்ளியில் அமர்ந்தார்கள். உஸ்மான் இப்னு தல்ஹாவிடமிருந்து கஅபாவின் சாவியை அலீ (ரழி) வாங்கியிருந்தார். அச்சாவியை எடுத்துக் கொண்டு அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! ஹாஜிகளுக்கு நீர் புகட்டும் பொறுப்பு எங்களுக்கு இருப்பதுடன் கஅபாவைப் பராமரிக்கும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!” என்றார்கள். இவ்விஷயத்தைக் கூறியவர் அப்பாஸ் (ரழி) என்றும் ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. நபி (ஸல்) “உஸ்மான் இப்னு தல்ஹா எங்கே?” என்று கேட்டு அவரை அழைத்து வரக் கூறி “உஸ்மானே! இதோ உனது சாவியைப் பெற்றுக் கொள். இன்றைய தினம் நன்மை மற்றும் நேர்மையின் தினமாகும்” என்று கூறினார்கள்.

‘தபகாத்’ என்ற நூலில் இப்னு ஸஅத் (ரழி) குறிப்பிடுகிறார்: நபி (ஸல்) உஸ்மானிடம் சாவியை வழங்கும்போது, “இதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களிடம் காலம் காலமாக இருந்து வரட்டும். அநியாயக்காரனைத் தவிர வேறெவரும் உங்களிடமிருந்து இதனைப் பறிக்க மாட்டான். உஸ்மானே! நிச்சயமாக அல்லாஹ் உங்களை தனது வீட்டிற்கு நம்பிக்கைக்குரிய பொறுப்பாளியாக நியமித்திருக்கின்றான். இந்த கஅபாவின் மூலம் நல்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.