ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது
தவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள்
தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது
தவாஃபை முடித்த பிறகு 'ஸபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப்
பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம்
பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்
ஸபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு
துஆ செய்ய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் "நிச்சயமாக ஸபாவும் மர்வாவும்
அல்லாஹ்வின் சின்னங்களாகும்" என்ற வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ
அங்கிருந்தே ஆரம்பிப்பீராக" என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள்.
அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா
லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு
வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸா அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா" என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள்.
இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை
நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல்
வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள்.
ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ