(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
(ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, (தூதராகிய) அவருக்கு (சன்மார்க்கத்தில்) உதவிபுரிந்தும், அவரை கண்ணியபடுத்தியும், காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வாகிய) அவனை துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்!.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.