(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.
அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர்; அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.